Madurai Kovalan Pottal | கோவலன் பொட்டல்
சிலப்பதிகாரத்தில் வரும் கோவலனின் தலைவெட்டப்பட்ட இடம்தான் கோவலன் பொட்டல் என்று நம்பப்படுகிறது. கோவலன் பொட்டலில் அமைந்துள்ள ஒரு கல்லை வெட்டுப்பாறை என்று அழைக்கின்றனர். இங்குள்ள சிறு கோயிலிலுள்ள சிற்பங்களை கோவலன், கண்ணகி, மாதவி என்றும் கூறுகின்றனர்.
பழங்காநத்ததிற்கு மிக அருகில் கோவலன் பொட்டல் அமைந்துள்ளது. பழங்காநத்தம் என்னும் பெயரே இது பழங்காலத்திலேயே மக்களின் குடியிருப்புப் பகுதியாகத் திகழ்ந்ததைக் குறிக்கிறது. பழங்கால நத்தம் என்பதே பழங்காநத்தம் என மருவியுள்ளது எனலாம்.
கோவலன் பொட்டலில் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை 1981 இல் அகழாய்வு நடத்தியது. அவ்வாய்வின் பயனாகப் பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள் சில வெளிக் கொணரப்பட்டன. கருப்பு, சிவப்பு வண்ண மட்பாண்டங்களும், புதிய கற்காலக் கைக்கோடாரி ஒன்றும், சில செப்புக்காசுகளும் இவ்வாய்வில் கிடைத்தன.
கோவலன் பொட்டலில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அகழாய்வின் மூலம் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சங்கப்பாண்டியர் காலச் செப்புக்காசு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இதில் எவ்விதமான பெயர் அல்லது எழுத்துக்களும் இல்லை.
நீங்கள் கோவலன் பொட்டலை பார்த்திருக்கிறீர்களா?
கருத்துகள்