Showing posts with label Madurai Pandi Muni Kovil. Show all posts
Showing posts with label Madurai Pandi Muni Kovil. Show all posts

Madurai Pandi Muneeswarar Thirukovil | பாண்டி முனீஸ்வரா்

மதுரை அருள்மிகு பாண்டி முனீஸ்வரர் தல வரலாறும் சிறப்புகளும் பாண்டி. 



நீ என்ன செய்வியோ தெரியாது. என்னோட கோரிக்கைய நீ சீக்கிரமே நிறைவேத்தித் தரணும்' என சாமிக்கே கட்டளையிடுவது போலத்தான் வரம் கேட்கிறார்கள் பக்தர்கள். 

கடவுளைத் தாயாய்- தந்தையாய்- தாயுமானவனாய்- தந்தையுமானவனாய்பார்த்தார் பாரதியார். காதலனாய் பார்த்தார்கள் ஆண்டாளும் மீராவும். கடவுளைக் காதலியாகவே பார்த்தார் குணங்குடி சித்தர். 

அண்ணன் 15 நாளா கனவுல வந்து, "வாடா... வந்து என்னய பாத்துட்டுப் போ'ன்னு சொல்லிச்சு. அதான் வந்தேன்'' என பாண்டி முனீஸ்வரனை அண்ணனாகப் பார்க்கிறார்கள்பாண்டி யின் பக்தர்கள்.

பொங்கலோ, ஆடு வெட்டுவதோ, சுருட்டு வாங்கி வைப்பதோ, பாலாபிஷேகம் செய்வதோ... எப்படி வேண்டு மானாலும் படைத்து பாண்டியை வணங்கலாம். "கடவுளின் அருளைப் பெற சடங்குகள் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது. விரும்பிய வழியில் கடவுளின் அன்பைப் பெறலாம்' என்கிற உயர்ந்த தத்துவத்திற்கு உதாரணமாக இருக்கிறது பாண்டி கோவிலின் பக்தி மார்க்கம்.

மதுரை வடக்குப் பகுதியில் இருக்கும் மேலமடை பகுதியில் இருக் கிறது பாண்டி முனீஸ்வரர் கோவில். பாண்டியைப் பற்றி மதுரை மாவட்ட மக்களிடையே பல செவிவழிக் கதைகள் உண்டு. அதில் சிறுவர்களை மிரள வைக்கும் பிரசித்தி பெற்ற கதை ஒன்று உண்டு.

வீட்டுக்கே அடங்காத பிள்ளையாய் வளர்ந்த பாண்டி, நாளாவட்டத்தில் யாருக்கும் அடங்காத- அடக்கவும் முடியாத மனிதரானார். ஆனால் அநீதியைக் கண்டால் ஆக்ரோஷத்தோடு பாய்வார். இப்படி வாழ்ந்த பாண்டி இறந்தபின் ஒரு குடும்பத்தின் குலதெய்வமாகி, இன்று தென்மாவட்ட மக்களின் இஷ்ட தெய்வமாகி இருக்கிறார். இப்போதும்கூட பாண்டி சிலையை குழந்தை கள் பார்த்தால் பயந்து போகும். முழிகளை உருட்டி, முறுக்கிய மீசையோடு சினந்து காணப்படும் பாண்டி முனி... 

எப்போது வேண்டு மானாலும் ஆக்ரோஷத் தோடு கிளம்பிவிடும் என்ப தால், சிலையை இரும்புச் சங்கிலியால் கட்டிப் போட்டிருக்கிறார்கள்' எனச் சொல்வார்கள். இதுபோல பல கதைகள் உண்டு.

ஒரு குடும்பத்தினர் வம்சாவழியாக இக் கோவிலை நிா்வாகித்து வருகிறாா்கள். இனி பாண்டி கோவில் வரலாறு குறித்துக் காண்போம். பாண்டியைப் பத்தி நிறைய்ய கதைகள் இருந்தாலும்,நிஜம் வேறு. சுமாா் நூறு வருஷங்களுக்கு முன்பு இந்த இடம் பழைய மதுரை என சொல்லப் பட்டது. கரூர் அருகே உள்ள நெரூர் கிராமத்தில் முத்தரையர் வம்சத்தைச் சேர்ந்த வள்ளியம்மை பிழைப்பு தேடி மதுரை மாநேரியில் குடியேறினார்.

வள்ளியம்மை கனவில் பலமுறை சாமி வந்து, மேலமடை கிராமத்தில் தான் புதைந்திருக்கும் இடத்தைச் சொல்லியது. ஆனா அந்த அம்மா கனவை பொிதாக கவனம் செலுத்த வில்லை. ஆனா கனவு தொடர்ந்து வரவும் கிராம மக்கள்கிட்ட இந்தக் கனவைச் சொல்லியிருக்கார். உடனே வண்டியூர், உத்தங்குடி, கருப்பாயூரணி கிராம மக்களோட மேலமடை மக்களும் சேர்ந்து வள்ளியம்மை கனவில் சாமி சொன்ன இடத்தைத் தோண்டியபோது, உருட்டிய விழிகள், முறுக்கிய மீசை, அடர்ந்து நீண்டு வளர்ந்த ஜடாமுடியோடு சம்பணமிட்ட தவக்கோலத்தில் சாமி சிலை கிடைத்தது. அந்த சிலையை வெளியே எடுத்து, ஒரு குடிசை போட்டு சிலையை வைத்து கும்பிடத் தொடங்கினார்கள். ஜடாமுனீஸ்வரர் கோவில் என மக்கள் மத்தியில் பிரபலமானது. வள்ளியம்மையே பூசாரியாக இருந்தார்.

அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியாக- நடக்கக்கூட சரிவர பாதையில்லாத காலம். கம்பீரமாக இருக்கிற ஜடாமுனியைப் பார்த்து மக்கள்- குறிப்பாக குழந்தைகள் அச்சப்பட்டதாம். நீண்டு வளர்ந்த ஜடாமுடியைப் பார்த்து சாமியை இரும்புச் சங்கிலியால் கட்டி வைத் திருப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டார்கள்.

அந்தக் காலத்திலேயே கோவில் பிரபலமாகிவிட, வெள்ளைக்கார அரசாங்கம் கோவிலுக்கு சில சட்ட- திட்டங்களைப் போட்டது. இதேபோல் எல்லா கோவில்களுக்கும் சட்டங்கள் போட்டது. ஆனால் வள்ளியம்மை நீண்ட போராட்டம் நடத்தியதன் விளைவாக 1930-களில் ‘"அரசு சட்டங்களிலிருந்து விலக்கு அளிக் கப்பட்ட கோவில்' என்ற பெருமையைப் பெற்றது.

இப்போதும் தமிழக அரசின் அறநிலையத் துறையின் ‘"அன்ன தானம்' உள்ளிட்ட சில சலுகை களைப் பெற்றாலும், இது விலக்கு அளிக்கப்பட்ட கோவில்தான். வள்ளியம்மையின் வம்சாவழியினர் தொடர்ந்து கோவில் பூசாரிகளாக இருந்து வந்தனர். இவா்கள் சமூகத்தை சாா்ந்தபடி, பாண்டி கோவில் என்பது, "பாண்டி பூசாரி கோவில்' என அழைக்கப்பட்டு, நாளடைவில் ஜடாமுனீஸ்வரர் என மாறி பாண்டி முனீஸ்வரர் கோவில் ஆனது.

பக்தர்கள் கோரிக்கை யில் நியாயம் இருப்பின்.... அதை உடனே நிறை வேத்தி வைப்பார் பாண்டி முனி. பில்லி, சூன்ய, ஏவல்களில் பாதிக்கப்பட்ட வங்க பாண்டிகிட்ட முறை யிட்டா... உடனே சரி பண்ணுவார். குழந்தையில்லாதவர்கள் தூளிகட்டி வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்'' என பாண்டி கோவில் வரலாற்றை கூறுகிறாா்கள் அங்குள்ள மக்கள்.

பொதுவாக இந்துக்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்தான் கோவிலுக்குப் போவது வழக்கம். ஆனால் "நல்லவருக்கு ஏது நாளும் கிழமையும்' என்பதுபோல... செவ்வாய், வெள்ளியோடு ஞயிற்றுக்கிழமை ரொம்ப விசேஷமாக இருக்கிறது. அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

எந்த மதத்தை சோ்ந்தவரானாலும் கோவிலுக்கு வரலாம், மேலும் , கர்ப்பக்கிரகம் வரை சென்று பாண்டியைத் தரிசனம் செய்யலாம். இப்படி சமயங்களைக் கடந்த சாமியாக இருக்கிறார் பாண்டி. பொதுவாக வீடுகளில் வெள்ளி, செவ்வாயில் அசைவம் சமைக்காத- உண்ணாத இந்துக்கள்கூட குடும்பம் குடும்பமாக வந்து ஆடு பலியிட்டு, தங்கள் நோ்த்திக் கடன் செலுத்தியும், அங்கே சமைத்தும் உண்ணு கிறார்கள்.

ஆனாலும் பாண்டிமுனி சைவச்சாமி என்கிறார் கோவில் பூசாரி. பாண்டி- ஆண்டி- சமயன் என மூன்று தெய்வங்கள் இங்கே இருக்கிறாா்கள். பாண்டிக்குக் கட்டுப் பட்டவர் ஆண்டி. அவருக்கு சுருட்டு வைத்து பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். ஆண்டிக்கு விருப்பமானது மாம்பழ பூஜை.

பாண்டிக்குக் காவலாக இருப்பது சமய கருப்பு சாமி. பாண்டி நிறைவேற்றிய கோரிக்கைகளுக்குப் பிரதிபலனாக மக்கள் ஆடுகளை பலியிடுவது கருப்பு சாமிக்கு மட்டுமே.

பாண்டி சைவச்சாமி. பொங்கல் படையல், நெய், பால், பன்னீர், சந்தன அபிஷேகம்தான் பாண்டிக்கு இஷ்டம். அதை மீறி பாண்டிக்கு எது கொடுத்தாலும் பக்தர்களின் இஷ்டத்தை ஏற்றுக் கொள்கிறார் பாண்டி''’என்கிறார் பூசாரி.

லாரிகளில், டிராக்டர்களில், பஸ்களில், வேன்களில் கூட்டம் கூட்டமாக வந்தபடியே இருக்கிறார்கள் மக்கள். நிறைவேறின கோரிக்கைக்காக நேர்த்திக் கடன் செய்ய வரும் பழைய பக்தர்கள், கோரிக்கை வைப்பதற்காக வரும் புதிய பக்தர்கள் என எல்லா நாளும் திருவிழாவாக இருக்கிறது பாண்டி கோவிலில். சமய பேதங்களைக் கடந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் இந்த சைவ முனி.

சமய கருப்பை பற்றிய சுவையான கதை உண்டு. ஒரு முறை ஒரு வெள்ளைக்காரன் அங்கு வந்து கேலியாக நான் இன்று எத்தனை விலங்குகளைக் கொல்வேன் எனக் கேட்க சமயக் கருப்பு பேசாமல் இருந்ததாம். (சிலை என்பதினால்) . அன்று முழுதும் வேட்டை ஆடி விட்டு எந்த மிருகமும் கிடைக்கவில்லை என்பதினால் கோபத்துடன் திரும்பி வந்த வெள்ளைக்காரன் அந்த சிலையின் கைகளையும் முகத்தையும் உடைத்துவிட்டுச் சென்றானாம். ஆனால் போகும் வழியிலயே அவன் கல்லாக மாறி விட்டானாம். அதனால்தான் இன்றும் சமயக் கருப்புக்கு தலையும் கைகளும் இல்லையாம்.

ஆண்டி அய்யாவுக்கு இனிப்பு இல்லாத பொங்கலும், பாண்டி ஐயாவுக்கு சைவ உணவும், சமயக் கருப்புக்கு மிருக பலிகளும், கள், சுருட்டு போன்றவையும் தரப்படுகின்றன. பாண்டி அய்யாவின் ஆலயத்துக்கு சென்றால் பேய் பிசாசுகளின் தொந்தரவு விலகும் என்பது மக்களின் நம்பிக்கை. அங்கிருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ள கழுன்கட்டி என்ற இடத்தில் பல வேல்கள் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அந்த இடத்தை அடைந்ததும் பேய்பிசாசு பிடித்தவர்கள் துள்ளி குதிப்பார்கள். ஆகவே அந்த வழியாக செல்லும் வாகனங்களை பேய் , பூதங்களுக்கு பயந்து மரியாதை தரும் வகையில் வண்டிகளை நிறுத்தி விட்டுத்தான் செல்வார்கள்.

பாண்டி முனீஸ்வரருக்கு ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் ( ஆடி) தனி விழா நடைபெறுகின்றது. மக்கள் மாம்பழத்தை காணிக்கையாகத் தருகிறார்கள். பாண்டி அய்யாவுக்கு சர்க்கரை பொங்கல் படைகின்றார்கள். ஒரு தடுப்புத் திரை போடப்பட்டு அதற்கு அந்தப் பக்கத்தில் சமய கருப்புக்கு மிருக பலி தரப்படும். ஆண்டி அய்யாவின் படிகள் முழுவதும் மாங்காய் பழத்தினால் அலங்கரிக்கப் படும். அவருக்கு வெண்பொங்கல் பிரசாதம் வைக்கப்படுகின்றது.

Pandi Muneeswarar


Featured Post

Chidambaram Nataraja Kovil Arthajama Puja | சிதம்பரம் நடராஜர் கோவில் அர்த்தஜாம பூஜை

சிதம்பரம் நடராஜர் கோவில் அர்த்தஜாம பூஜை (இரவு பூஜை) மிக விசேஷமானது. அனைவரும் பார்க்க வேண்டிய நிகழ்வு. சைவத்தின் தலைநகராக கொண்டாப்படும் சிதம்...