Vakku tavarata nermaiyum elimaiyume irandu mukkiya tevaikkal |வாக்குத் தவறாத நேர்மையும், எளிமையுமே .இரண்டு முக்கிய தேவைகள்
வாக்குத் தவறாத நேர்மையும், எளிமையுமே .இரண்டு முக்கிய தேவைகள்.." (வெள்ளம் போல் கொட்டித்தீர்த்த பெரியவாள்) சொன்னவர்; ஓர் சம்பவம் ஜே.டபிள்யூ எல்டர் என்ற ஐரோப்பியர், பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். அவர், ஹிந்து சமயம்,பாரதப் பண்பாடு பற்றி நிறைய அறிந்திருந்தார். பாரதத்தில் பல துறவிகளையும்,மகான்களையும் சந்தித்து வெகுநேரம் உரையாடியிருக்கிறார்.
எல்லோரும் அறிவுபூர்வமான பதில்களைச் சொன்னார்களே தவிர. இதயபூர்வமான பதில்களைக் கூறவில்லை - என்று, அவருக்குத் தோன்றியது. "என் சந்தேகத்துக்குத் தெளிவு கிடைக்காமலே நான் திரும்பிப்போக வேண்டியதுதானா?" என்று நொந்து கொண்டிருக்கும் வேளையில், பெரியவாள் தரிசனம் கிடைத்தது.
'பெரியவா சிரிக்கும்போது, குழந்தை கிறிஸ்து சிரிப்பது போலிருக்கிறது!... மானுடத்தை விஞ்சிய ஒரு தெய்வீக ஈர்ப்பு இருக்கிறது...' இந்தக் 'குழந்தை' என் கேள்விகளுக்குப் பதில் சொல்லுமோ?.. கேட்டுப் பார்க்கலாமே? "சுவாமிஜி! ஹிந்து சமயக் கோட்பாடுகளில், எந்த இரண்டு தத்துவங்களை, இன்றைய காலகட்டத்தில், அழுத்தமாக விளக்கிக் கூறி, மக்கட் சமுதாயம் பயன் பெறச் செய்ய வேண்டும் என்று தாங்கள் விரும்புகிறீர்கள்?" பெரியவாள் நீண்ட நேரம் மௌனமாக இருந்தார்கள்.
ஐதரேயத்தின், 'ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம' என்ற மகா வாக்யம், இந்த ஐரோப்பியனுக்குப் புரியவே புரியாது; திடீரென்று பதில் வெளிப்பட்டது. "பாரதம் சுதந்திரமடைவதற்கு முன், சுமாராகப் பத்து சதவிகித மக்கள் தான் நேர்மை குறைந்தவர்களாக இருந்தார்கள். எல்லாத் தொழிலாளர்களின் பேச்சிலும் சத்தியமும் நேர்மையும் இருந்தன.
கடன் கொடுத்தல், பண்டமாற்று முதலியன கூட, சொற்களின் அடிப்படையிலேயே நடந்தன. பேச்சுத் தவறினால், பாவம் வந்து சேரும்; நமது சந்ததியினர் துன்பப்படுவார்கள் - என்ற பயம் இருந்தது." "இப்போது அதெல்லாம் போச்சு;..வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை என்று சட்டம் போட்டார்கள்.
அந்த உரிமையைக் கொடுக்குமுன், அதை அவன் எவ்வாறு உபயோகிப்பான் என்று எண்ணிப் பார்க்கவில்லை. கல்வி அறிவில்லாத, ஏழையான ஒருவனுக்கு, இவ்வளவு முக்கியமான உரிமை கிடைத்தால் என்ன செய்வான்?..என்ன செய்வானோ,அதுவே நடந்தது! வாக்குரிமை விலைபேசப்பட்டது."
"இது, முதலாவது வீழ்ச்சி." 'அடுத்து; புதிய கண்டுபிடிப்புகளால் ஏற்பட்ட பொது நல விரோதச் செயல்கள். "போர்வெல் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி விட்டால்... அப்புறம், தண்ணீர் ஆதிசேஷன் தலை வரை போய் விடுகிறது.
வருமானம் அதிகரித்து விட்டதால், ஆடம்பரமான வாழ்க்கையில் மனம் ஈடுபடுகிறது." "எது வாழ்க்கைக்குத் தேவை? எது, சுகபோகம்?" என்ற உணர்வு மரத்துப் போய் எதைக் கண்டாலும் அனுபவிக்க வேண்டும் என்ற அசுரத்தன்மை வந்து விடுகிறது. "எளிமையான வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், அந்த வாழ்க்கை எல்லோருக்கும் நிச்சயமாகக் கிடைக்கும்.
ஆனால்,சுகபோகங்களை எல்லா ஜனங்களுக்கும் கிடைக்கச்செய்ய முடியுமா? அவ்விதம் கிடைக்கப் பெறாதவர்கள், நேர்மையைக் கைவிடுகிறார்கள்.!" "வாக்குத் தவறாத நேர்மையும்,எளிமையுமே .இரண்டு முக்கிய தேவைகள்.." அரைமணி நேரம், வெள்ளம் போல் கொட்டித் தீர்த்து விட்டார்கள்,பெரியவாள்.
ஐரோப்பியர், ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித் திக்குமுக்காடினார். சமுதாய நலனைப் பற்றி, இவ்வளவு ஆழமாகப் பெரியவாள் சிந்தித்திருப்பது, மடத்துத் தொண்டர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விடக்கூடாது. ஐரோப்பியரின் கேள்வி,இன்றைக்கும் பொருந்தக் கூடியது தான். பெரியவாள் கொடுத்த பதில்,என்றைக்கும் பொருத்தமானதுதான்!
கருத்துகள்