நெய்க்குள தரிசனம்
சிலர் கோவில்களில் நெய்க்குள தரிசனம் நடத்துவதுகுறித்தும் அதன் தத்துவங்கள் குறித்தும் கேட்டிருந்தனர்..
அண்மை காலமாக நெய்க்குள தரிசனம் என்னும் சிறப்பு வழிபாடு நம்மிடையே பிரபலமடைந்து வருகிறது. நெய்க்குள தரிசனம் என்பது பொதுவாக அம்மன் கோவில்களில் அதுவும் பிரசித்தமாக மாயவரம் அருகே உள்ள திருமீயச்சூரில் லலிதாம்பிகை கோவிலில் மாபெரும் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
விசேஷ நாட்களிலோ அல்லது அந்தந்த கோவிலுக்கென்று உள்ள சம்பிரதாயத்தில் குறிப்பிட்ட முக்கியமான நாட்களிலோ மூலஸ்தான அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்வர். பின்பு கருவறைக்கு முன் உள்ள அர்த்தமண்டபத்தில் பெரிய மர சட்டங்களை தயார் செய்து இருத்தி அதில் இடைவெளியின்றி வாழையிலையை பரப்பி அதன்மீது சர்க்கரை பொங்கலை நிரப்புவர். இப்பொழுது அந்த பொங்கல் குவியலின் நடுவே சுத்தமான நெய்யை ஊற்றி குளம்போல் அமைப்பர். சரியாக தீபாராதனை நடக்கும் நேரம் மூலஸ்தான அம்பாளின் அழகுத்தோற்றம் அந்த நெய்க்குளத்தில் பிரதிபலிக்கும் காட்சியை பக்தர்கள் கண்டுமகிழலாம். பின்பு அந்த பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும்.இதுவே நெய்க்குள தரிசனம்.
சரி விஷயத்திற்கு வருவோம்.. இந்த வழிபாட்டின் தத்துவம் என்ன? ஆகமரீதியாக பல காரணங்கள் இருக்கலாம்.. நிச்சயம் இருக்கும்.. சபையில் உள்ள பெரியோர்கள் அவற்றை தெளிவு படுத்த வேண்டுகிறேன்.. சக நண்பர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.. அதற்க்கு முகவுரையாக அடியேனது கருத்தை பதிவு செய்கிறேன்.
பொதுவாக நம் மனதை சிலர் பாலோடு ஒப்பிடுவர்.. உதாரணம் : "அவர் மனசு பால் மாதிரி சுத்தமானது" என்பர். ஆக கள்ளம் கபடமற்ற குழந்தையுள்ளம் பாலுடன் ஒப்பப்படும். இவ்வாறான மனதில் உலகியல் அறிவு என்னும் மோரை சேர்த்து உறை ஊற்றுகிறாள் பராசக்தி.. இங்கே உலகியல் அறிவு உறை மோராக கூறியமைக்கு காரணம் ஒரே விஷய ஞானம் எல்லா உயிர்களையும் சம்சாரத்தில் தள்ளிவிடுகிறது.. எப்படி பாலை காய்ச்சி உறை ஊற்றினால் அது தயிராவது சஹஜமோ.. அதுபோல விஷயஞானம் அறிவாளி முதல் அனைவரையும் சம்சார பந்தத்தில் நிலைக்க பண்ணுவதும் சஹஜமே.
அறிவாளி ஆராய்ச்சியில் காலம் கழிக்கிறான்.. கல்விச்செல்வர்கள் கலையில் ஈடுபட்டு காலத்தை கழிப்பர்.. வீணர்கள் பொழுதுபோக்கிலும் மூர்க்கர்கள் சண்டையிலும் சம்சாரிகள் பொருள் தேடுவதிலும் காலத்தை கழிப்பர்.. இவ்வித வாழ்க்கை இவர்களுக்கு இன்பத்தை தந்தாலும் இவை நிலையற்றவை.. விஷய ஞானத்தால் உலக வாழ்க்கைக்கு விடுதலை தர இயலாது.. மேலும் அதனால் சாசுவதமான சுகமும் கிட்டுவதில்லை..பாவம் இதை உணரக்கூட முடியாமல் தயிராய் உலக சட்டியினுள்ளே கிடப்பர்.
தயிர் கடையப்படும் பொழுது பார்த்திருக்கிறீர்களா? கர்த்தா மத்தை சுழற்ற தயிர் பானையின் விளிம்பை தொடும் அது வெளியே வழியும் முன் சுழற்றுகிறவர் நிறுத்த மீண்டும் உள்ளே சென்றுவிடும்.. இதுபோல் தான் அம்பிகையும் சம்சாரம் என்னும் பானையில் மாயை எனும் மத்தைக்கொண்டு நம்மை கடைகிறாள். காலம் காலமாக... பல பிறவிகளாக.. அவரவர் வினைப்பயனுக்கேற்ப.... கர்த்தாவின் அனுமதியின்றி தயிர் எப்படி இந்த விளையாட்டில் வெளிய வரமுடிவதில்லையோ அதுபோல ஜகத் வியாபாரத்தில் அம்பிகையின் அருளன்றி நம்மை நாம் விடுவித்துக்கொள்ள முடியாது.
இதற்க்கு முடிவென்ன.. தயிர் வெண்ணையாய் திரண்டு நிற்கும் சமயம் கர்த்தா கடைவதை நிறுத்தி வெண்ணையை சேகரிப்பார். அதுபோல சாத்திரம் கற்றோரும், பக்திமான்களும், சாதுக்களை புகலிடமாக கொண்டவர்களும் உலகியலின் நிலையாமை நன்கு உணர்ந்து அம்பாளை /பகவானை சரணடைந்து துதிக்கும்கால், அவரவர் வினைப்பயனுக்கேற்ப பக்தியின் வளிக்கு ஏற்ப அம்பிகையால் ரக்ஷிக்க படுவர். இங்கே வெண்ணெய் எனப்பட்டது அசஞ்சல நிஷ்காம்ய நிஷ்கபட பக்தி உள்ள மனம்.
பெரியவா சொல்வார்: "ம்ருக்" என்றால் சதா தேடுவது என்று பொருள். வாழ்நாள் பூரா இரையையும் துணையையும் தேடிண்டு இருக்கிறதால எல்லா விலங்கினங்கள "மிருகம்"ன்னு சொல்றோம். அதுபோல மனஸ் இருக்கிறதால நாமெல்லாம் மனுஷாள் என்று.. மனுஷன் இறைநிலை எய்தனும்னா மனச கொல்லம்னும்னு " வெண்ணெய் காய்ச்சப்படும் பொழுது அது பாலின் தன்மையை இழக்கும் சூட்டில் உருகி தன்னையிழந்து கெடாத பொருளாக நெய்யாக உருகொள்ளும்.. அதுபோல தூய உள்ளம் கொண்ட சாதகன் சரியை கிரியை முதலிய மார்க்கங்களை கடந்து.. குரு மொழியாலும் அனுபவ பூர்வ அறிவினாலும் மேன்மைகண்டு.. அகப்பூசையால் மனத்தை கொன்று இறையில் ஒடுங்குவான்..ஆம் மேற்க்கண்ட அனுபவங்கள் மூலம் தன் ஆத்ம ஸ்வரூபத்தையே இறையாக காணுவான்.. இந்த தத்துவமே இந்த நெய்க்குள தரிசனம்..
இங்க நெய்யாகப்படுவது நம் அகமே.. அதில் நாம் காணவேண்டியது நம் ஆத்மஸ்வரூபமான லலிதையே...
லலிதே சரணம்
காமாக்ஷி சரணம்
திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை நெய்க்குள தரிசனம்.
கருத்துகள்